புதுடெல்லி:
பிஹாரின் 243 தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பிஹாரின் புர்னியா மாவட்டத்தில் 15.54% வாக்குப்பதிவாகியுள்ளது.
முதல்கட்ட தேர்தலில் பிஹார் வரலாற்றில் முதல்முறையாக சுமார் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகின. பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தலிலும் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 9 மணி நிலவரம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுவதை உறுதி செய்துள்ளது.
3.7 கோடி வாக்காளர்கள்; 1302 வேட்பாளர்கள்: தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 3.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்கள் ஆவர்.
ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று தேர்தலை சந்திக்கும் 122 தொகுதிகளில் மெகா கூட்டணி சார்பில் ஆர்ஜேடி 70, காங்கிரஸ் 37, விஐபி 8, சிபிஐ (எம்எல்) 5, மார்க்சிஸ்ட் 4, இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் போட்டியிடுகின்றன. மெகா கூட்டணி கட்சிகளுக்கு இடையே 5 தொகுதிகளில் போட்டி நிலவுகிறது.
என்டிஏ சார்பில் பாஜக 52, ஜேடியு 45, எல்ஜேபி 16, எச்ஏஎம் 6, ஆர்எல்எம் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிரஷாந்த் கிஷோர் 122 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். ஒவைசி கட்சி சார்பில் 2 இந்து மற்றும் 25 முஸ்லிம்கள் களத்தில் உள்ளனர்.