நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா!!

நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து காந்திமதி அம்பாள் தவக்கோலத்துடன் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார்.

தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். நேற்று காலை 6 மணிக்கு கம்பாநதியில் காந்திமதி அம்பாள் தவம் இருந்தார்.

10 மணிக்கு அம்பாளுக்கு காட்சி கொடுப்பதற்காக, சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். அவருடன் நெல்லை கோவிந்தரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார்.

பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் நெல்லையப்பரும், நெல்லை கோவிந்தரும் இணைந்து திருஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்தனர். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர். மதியம் 12.15 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அம்பாள், சுவாமியை 3 முறை சுற்றி வந்தார். அதன்பிறகு சுவாமிக்கும், காந்திமதி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். பெண்கள் குலவையிட்டனர்.

இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.


மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா வருதல், திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்மன் பூம்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வீதிஉலா நடைபெற்றது. இன்று முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை அம்மன் ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 18-ந் தேதி இரவில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடுபட்டிணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *