மும்பை:
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து, அவரது காதலரும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனையான 29 வயதான ஸ்மிருதி மந்தனா பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஐசிசி உலகக் கோப்பையை வென்ற நிலையில் பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை வீடியோவாக வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் ஸ்மிருதி மந்தனா.
இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலி மாவட்டத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது திடீரென ஸ்மிருதி மந்தனாவின் தந்தை னிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திருமணத்தை தள்ளிவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலாஷ் முச்சல், சில மணி நேரங்களில் வீடு திரும்பினார். அதேவேளையில் ஸ்மிருதியின் தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா, தனது நிச்சயதார்த்த வீடியோக்கள், ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கி உள்ளார். இந்த வீடியோக்களை பகிர்ந்திருந்த இந்திய அணியின் வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் நீக்கி உள்ளனர்.
அதேவேளையில் பலாஷ் முச்சலுடன் எடுத்துக்கொண்ட மற்ற படங்களை ஸ்மிருதி மந்தனா நீக்கம் செய்யவில்லை.