புதுடெல்லி:
நவம்பர் மாதம் பல உத்வேகங்களை வழங்கியுள்ளது. விமானப் பராமரிப்பு துறையில் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் பேசியதாவது:
2025 நவம்பர் மாதம் பல உத்வேகங்களை நம்மிடம் கொண்டு சேர்த்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாகத்தான் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினத்தன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வந்தே மாதரத்தின் 150 ஆண்டு கொண்டாட்டங்கள் மிகச்சிறப்பாக தொடங்கப்பட்டன. நவம்பர் 25-ம் தேதியன்று அயோத்தி ராமர் கோயிலில் தர்மக்கொடி ஏற்றப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பாக, ஹைதராபாதில் உலகின் மிகப் பெரிய விமான என்ஜின் எம்.ஆர்.ஓ. வசதியை தொடங்கி வைத்தேன்.
விமானங்களை பராமரித்து, பழுதுபார்த்து செப்பனிடும் துறையில் இந்தியா சர்வதேச அரங்கில் முன்னிலை வகிப்பதற்கு இந்த திட்டம் வழிகோலியுள்ளது.
கடந்த வாரங்களில் மும்பையில் ஐ.என்.எஸ். மாஹே கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது மிகப்பெரும் நிகழ்வு.
357 மில்லியன் டன் உணவு.. நமது தேசம் உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைத்திருக்கிறது. அதாவது 357 மில்லியன் டன் உணவுப் பொருட்களை நம்நாடு உற்பத்தி செய்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பான தரவுகளுடன் ஒப்பிடும்போது உணவுப் பொருள் உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்து சிறப்பான வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வலம் வந்த ஒரு காணொலி என்னை மிகவும் கவர்ந்தது. இது இஸ்ரோவின் வித்தியாசமான ட்ரோன் போட்டி தொடர்பானது.
நமது தேசத்தின் இளைஞர்கள் அதிலும் குறிப்பாக, ஜென் ஸீயைச் சேர்ந்த இளைஞர்கள் செவ்வாய் கிரகம் போன்ற இடங்களில் ட்ரோன்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அங்கு ஜிபிஎஸ் வசதி சாத்தியமில்லை என்பதால் ட்ரோன்களுக்கு வெளியிலிருந்து எந்தவித சுட்டுதலோ, வழிகாட்டுதலோ கிடைக்கவில்லை.
இதனை காணும்போது என் மனதில் சந்திரயான்-2 நமது தொடர்புக்கு அப்பால் சென்றதுதான் நினைவுக்கு வந்தது. விஞ்ஞானிகள் சில மணி நேரங்களுக்கு ஏமாற்றத்தின் மொத்த உருவமானார்கள். ஆனால், தோல்வி அவர்களை தடைப்படுத்தவில்லை. அதேநாளன்று, நமது விஞ்ஞானிகள் சந்திரயான்-3 வெற்றிக் கதையை எழுதத் தொடங்கிவிட்டார்கள்.
தேனின் இனிமையை அனைவரும் அறிவோம். ஜம்மு-காஷ்மீர் மலைப்பகுதியில் உள்ள சுலாயி எனப்படும் வனத்துளசி மலர்களிலிருந்து தேனீக்கள் உலகின் மிகச் சிறந்த தேனை உருவாக்குகின்றன.
வெண்மை நிறம் கொண்ட இந்த சுலாயி தேனுக்கு புவிசார் குறியீட்டு காப்புரிமை கிடைத்துள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் தேன் உற்பத்தி 76 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
2030-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தமிழில் பேசிய பிரதமர் மோடி: மனதின் குரல் நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க கோவை சென்றிருந்தேன். தென்பாரதத்தில் இயற்கை வேளாண்மை தொடர்பான முயற்சிகளை பார்க்கும்போது பிரமிப் படைந்தேன்.
பல இளைஞர்கள், தொழில்வல்லுநர்கள் இப்போது இயற்கை வேளாண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழர்களுடன் பேசும்போது இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியங்களின் அங்கமாக இருந்துள்ளதை தெரிந்து கொண்டேன்.
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தொன்மையான நகரமான காசியில் சங்கமிப்பது மிகவும் அற்புதமானது. காசி தமிழ்ச் சங்கமத்தை பற்றிதான் பேசுகிறேன்.
டிசம்பர் 2-ல் காசியின் நமோ காட்டில், காசி தமிழ்ச் சங்கமத்தின் 4-ம் பதிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த முறை காசி தமிழ் சங்கமத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது. “தமிழ் கற்கலாம்” என்பதுதான் அது.
யாருக்கெல்லாம் தமிழ் மொழி மீது ஈடுபாடு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் காசி தமிழ்ச் சங்கமம் மகத்துவம் வாய்ந்த மேடையாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வரும் சகோதர சகோதரிகளை வரவேற்க இந்த முறையும் காசிவாசிகள் பெரும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் உள்ளனர். தமிழ் கலாச்சாரம் உயர்வானது. தமிழ் மொழி உயர்வானது. தமிழ் இந்தியாவின் பெருமிதம்” என்றார்.