சென்னை:
சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். விழாவின்போது சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை அமைச்சர் சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். டிச.18-ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழிலிருந்து ‘3 பி.எச்.கே.’, ‘மாமன்’, ‘அலங்கு’,‘காதல் என்பது பொதுவுடமை’, ‘மாயக்கூத்து’, ‘பறந்து போ’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘வேம்பு’ உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்படுகின்றன.
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, அவரது 50 ஆண்டு கலைச் சேவையைகவுரவிக்கும் வகையில் இன்று (டிச.12) ‘பாட்ஷா’ படம் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: சென்னை திரைப்பட விழாவில். இந்த ஆண்டு 51 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 122 தலைசிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. திரைப்படத் துறைக்கும், திராவிட இயக்கத்துக்கும் உள்ள உறவைப் பிரிக்க முடியாது.
இத்திரைப்பட விழா 2008-ல் தொடங்கப்பட்டபோது ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் கடந்த 2023-ல் ரூ.85 லட்சமாகவும், இந்த ஆண்டு ரூ.95 லட்சமாகவும் நிதி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கான மானியத்தையும் ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் நடிகை சிம்ரன், இயக்குநர் அபிஷன் ஜீவநித் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.