சென்னை:
பழனிசாமி, சி.வி.சண்முகம் தரப்பினர் தனித்தனியாகத் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் முடிவுக்காக இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.
தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராகப் சி.வி.சண்முகம் தரப்பினர் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கியதுடன், 25 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதேநேரத்தில், பழனிசாமி தங்களை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கியது செல்லாது என சண்முகம் தரப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் தங்களின் நிலைப்பாடு குறித்து இருதரப்பும் சபாநாயகரைத் தனித்தனியாகச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இருதரப்பினரும் நேற்று தனித்தனியாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிமுக உள்விவகார வட்டாரங்கள் கூறியதாவது: பழனிசாமி தனது சென்னை இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய பெரும்பாலான நிர்வாகிகள், ‘‘கட்சித் தலைமையின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
அதற்குப் பதிலளித்த பழனிசாமி, ‘‘இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் முதலில் என்ன முடிவை அறிவிக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதன் பிறகு நமது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்’’ என நிர்வாகிகளை அமைதிப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், சி.வி.சண்முகம்தரப்பும் தனது தற்காலிக அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
கூடிய விரைவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, அவசரப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இருதரப்பின் இந்த முட்டல் மோதல்களால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சண்முகம் தரப்பு ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘அடுத்தகட்ட நகர்வு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’ என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.