நெல்லை:
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியைப் போல் தற்போதைய தவெக ஆட்சியிலும் இந்த இரு மாவட்டங்களிலும் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
முதல் கட்டமாக முதல்வர் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.
இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 23 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் அருகிலுள்ள தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தலா 2 பேர் அமைச்சராகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஸ்குமார் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 தொகுதிகளில் தவெக வெற்றிபெற்றுள்ளது.
ராதாபுரம் தொகுதியில் சதீஷ் கிறிஸ்டோபர், திருநெல்வேலி தொகுதியில் ஆர்.எஸ்.முருகன், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகிய 3 பேர் வெற்றிபெற்றதால் இவர்களில் யாருக்கேனும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
அமைச்சர் பதவியை பெறுவதற்கு இவர்கள் ஒவ்வொருவருமே முனைப்பு காட்டி வந்தனர். ஆனால் யாருக்குமே வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த திமுக ஆட்சியின்போது ராதாபுரம் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த மு. அப்பாவு சட்டப்பேரவை தலைவராக பொறுப்பேற்றிருந்தார். அமைச்சராகும் வாய்ப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை.
பொறுப்பு அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, நேரு, கண்ணப்பன் போன்றோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதுபோன்ற நிலையமை தற்போதைய புதிய ஆட்சியிலும் ஏற்பட்டிருக்கிறது.
இதுபோல் கடந்த திமுக ஆட்சியின்போது தென்காசி மாவட்டத்துக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பொறுப்பு அமைச்சராக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செயல்பட்டார்.
இப்போதைய புதிய ஆட்சியிலும் தென்காசி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக எதிலும் வெற்றிபெறவில்லை. 4 தொகுதிகளில் திமுகவும், சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றதால் ஒட்டு மொத்தமாகவே தென்காசி மாவட்டத்தை தவெக கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வெற்றிபெற்றுள்ளார். தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவரான இவருக்கு அமைச்சராக வாய்ப்பு இருந்ததாகவும், கடைசிநேரத்தில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பொறுப்பை வழங்க தவெக முன்வரவில்லை என்பதால் இசக்கி சுப்பையாவுக்கு வாய்ப்பு பறிபோய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருந்தால் திருநெல்வேலி மாவட்டத்துக்கு இம்முறை அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.