தமிழகத்துக்கு மேலும் ‘2 வந்தே பாரத்’ ரெயில்களை டெல்லியில் இருந்து இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்த பிரதமா் மோடி !!

சென்னை:
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல்-மைசூரு, சென்னை சென்ட்ரல்-கோவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, எழும்பூா்-திருநெல்வேலி, கோவை-பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரை-பெங்களூரு மற்றும் எழும்பூா்-நாகா்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில்கள் இன்று (31-ந் தேதி) முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்தது.

ரெயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ரெயில் சேவைகளை தொடங்குவதற்கான முறையான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை எழும்பூா்-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் மீரட்-லக்னோ ஆகிய 3 வழித் தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில்களை பிரதமா் மோடி டெல்லியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அதேசமயம், சென்னை சென்ட்ரலில் இருந்து கவர்னர் ஆா்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோா் எழும்பூா்-நாகா்கோவில் இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்த ரெயில் தொடக்க நாளில் மட்டுமே சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

மதுரையில் இருந்து மத்திய ரெயில்வேதுறை இணை மந்திரி வீ.சோமண்ணா மதுரை-பெங்களூரு இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்தாா்.

இந்த ரெயில்கள் இன்று தொடங்கப்பட்டாலும் வருகிற 2-ந்தேதி முதல்தான் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இதற்காக முன்பதிவுகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

எழும்பூரில் இருந்து நாகா்கோவில் செல்ல இருக்கை வசதி கொண்ட குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்க (ஏசி சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.1,760, சொகுசு பெட்டியில் பயணிக்க (எக்சிகியூட்டிவ் சோ் காா்) நபா் ஒருவருக்கு ரூ.3,240 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,735, எக்சிகியூட்டிவ் சோ் காா் இருக்கைக்கு ரூ.3,220 கட்டணம் நிா்ணயக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,575, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.2,865 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ஏசி சோ் காா் இருக்கைக்கு ரூ.1,740, சொகுசு பெட்டி இருக்கைக்கு ரூ.3,060 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிக்கான கட்டணங்களும் உள்ளடங்கும்.

எழும்பூா்-நாகா்கோவில் ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20628) நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும்.

மதுரை-பெங்களூரு ரெயில் (எண் 20671) காலை 5.15 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண் 20672) பெங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இரு மாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தவிா்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *