இந்த முறையாவது தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 2000 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் நேற்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிலையில், இந்த முறையாவது தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 2000 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி திமுக எம்.பி.கனிமொழி நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கினார்.
நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தினார்.