ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட முடியாது என அறிவித்து விட்டது.
இதனால் பாகிஸ்தானிடம் ஹைபிரிட் மாடலாக இந்த தொடரை நடத்த ஐசிசி கேட்டுக்கொண்டது. நாங்கள் ஹைபிரிட் மாடலாக நடத்த தயார். அதேவேளையில் இந்தியாவில் நடைபெறும் தொடர்களையும் இதுபோது ஹைபிரிட் மாடலாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.
2027 வரை ஹைபிரிட் மாடலாக நடத்தலாம் என ஐசிசி தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட முடியாது என்றால், பாகிஸ்தான் அணியும் இந்தியா சென்று விளையாட எந்த காரணமும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்ரிடி கூறுகையில் “பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க வேண்டும் மற்றும் வலுவான கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்தியாவால் பாகிஸ்தானில் வந்து விளையாட முடியாவிட்டால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடுவதற்கு எந்த காரணமும் இல்லை.
ஒவ்வொரு உறுப்பு நாடும் கிரிக்கெட் விளையாடுவது அல்லது பணம் சம்பாதிக்க விரும்புகிறதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு ஐசிசி-க்க உள்ளது. இது தொடர்பாக ஐசிசி முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.