முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யா குடும்பத்திற்கு வீடு ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி டான்யா, அறிய வகை முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் குழந்தையின் உடல் நிலையினை கருதி மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் வீட்டு மனை அரசின் சார்பில் வழங்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 சதுரடிக்கு மிகாமல் வீடுகட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டு சிறுமி தான்யாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டான்யா, “இரண்டு வருடத்திற்கு முன் என்னை பலரும் கேலி செய்தனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் என்னுடன் அனைவரும் இயல்பாக பழகுகின்றனர்.
தற்போது எனக்கும் சொந்தமாக வீடு உள்ளது என நண்பர்களுடன் மகிழ்ச்சியாக தெரிவிப்பேன். எதிர்காலத்தில் எனக்கு மருத்துவராக ஆக வேண்டும் ஆசை உள்ளது. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நன்றி” என்றார்.