சென்னை
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த பதிவை குறிப்பிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்” என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது மு.க. ஸ்டாலினின் இந்த ட்வீட். தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை மந்திரியை சந்தித்த போதே தெரிவித்தது நான்.
என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்! கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!
இன்னும் வராத ஒன்றை “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.
தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.
Also Read 12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்!
ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுகளையும், உருட்டுகளால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.