அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் இடாநகரில் பிரமாண்ட சுரங்கப் பாதையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி !!

இடாநகர்:
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள கடைசி மாநிலமாக அருணாசல பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லைப்பகுதி சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

அருணாசல பிரதேசத்தின் பெரும்பான்மையான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதற்கு பெயர்களையும் சூட்டி சீனா அடாவடி செய்துவருகிறது.

அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,116 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதி சீனா, பூடான் எல்லையையொட்டியும் அமைந்து இருக்கிறது. தவாங்கில் இருந்து ஒட்டுமொத்த அருணாசல பிரதேசம் மற்றும் பூடான் திபெத்தையும் கண்காணிக்க முடியம்.

இங்கு அமெரிக்காவின் நயாகராவுக்கு இணையான நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மிகவும் அழகிய இந்த நீர்வீழ்ச்சிகள் மிகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. இதனால் தவாங் எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய சீனா முயற்சி செய்து வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு அத்துமீறிய சீன வீரர்களுக்கும், இந்திய படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து சீன படையை விரட்டி அடித்தனர். இரு நாட்டு படைகளும் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பதற்றமான நிலை தான் நிலவி வருகிறது.

அருணாசல பிரதேசத்தில் சில நேரங்களில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும். டீசல் கூட உறைந்து போகும் வகையில் பனி கொட்டும்.

அதேசமயம் மழைப்பொழிவும் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ராணுவ தளவாட பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்ல பல்வேறு பிரச்சனைகள் இருந்தது.

இதையடுத்து சீனா எல்லையையொட்டி தவாங்-டிராங் பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.825 கோடி மதிப்பிலான சேலா சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பெரும் சவால்களை கடந்து இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சுரங்கப்பாதை 1003 மீட்டர் நீளமும், மற்றொரு சுரங்கப்பாதை 1,595 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த சுரங்கப்பாதையில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள். காற்று வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் தவாங்-டராங் இடையே பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.

எந்த மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் 50 என்ஜினீயர்கள் மற்றும் 800 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த சுரங்கப்பாதை மூலம் இனி இந்திய வீரர்கள் எளிதாக சீனா எல்லைக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் பெரிய எந்திரங்களைக் கொண்டு செல்லலாம். இந்த வழியில் தினமும் 3 ஆயிரம் கார்கள் மற்றும் 2 ஆயிரம் லாரிகள் செல்லலாம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அருணாசல பிரசேதத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை சிறந்த போக்குவரத்துக்கு மட்டுமல்ல, எல்லையைப் பாதுகாப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் இடாநகரில் பிரமாண்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் 20 ஆண்டுகளில் செய்ததை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *