திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர்தான், சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது.
இன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும், 876 கிலோ கஞ்சாவும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம்.