சென்னை:
‘திமுக அங்கம் வகிப்பதால்தான் இண்டியா கூட்டணி வடஇந்தியாவில் தோற்கிறது’ என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கிண்டி ராஜ்பவன் அருகில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் கொள்கை.
இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எல்லோரும் பாடுபட்டு கொண்டிருக்கும் நேரத்தில் பிஹாரி, வட இந்தியன் என பேசி இந்த தேசத்தில் திமுக பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிஹார் மக்களை திமுக கீழ்த்தரமாக பேசுகிறது.
பாகுபாடு காட்டுகிறது என்றுதான் பிஹாரில் பிரதமர் மோடி பேசினாரே தவிர, தமிழர்கள் பேசுகிறார்கள் என அவர் கூறவில்லை.
பிஹாரிகள் அறிவில்லாதவர்கள். அவர்கள் தமிழகத்துக்கு வந்து, தமிழர்களின் வேலையை பறித்துக் கொள்கிறார்கள் என்று கே.என்.நேரு கூறினார். பிஹாரிகள் மேஜை துடைக்கவும், கழிவறையை சுத்தம் செய்வதற்கும்தான் ஏற்றவர்கள் என திமுகவினர் கூறினர்.
கோமியம் குடிக்கும் மாநிலம் பிஹார் என நாடாளுமன்றத்தில் திமுகவினர் கூறினார்கள்.
விமர்சனங்கள் திமுக மீதுதான் வைக்கப்படுகிறதே தவிர; தமிழர்கள் மீது அல்ல. ஆனால், தமிழர்களை பற்றி பேசியதாக திரித்து பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கண்டனங்கள்.
திமுக அங்கம் வகிப்பதால்தான் இண்டியா கூட்டணி வட இந்தியாவில் தோற்கடிக்கப்படுகிறது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்பது குறித்து மாநில தலைமைதான் முடிவுஎடுக்கும்.
ஆனால், அந்த கூட்டம் வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்கு எதிராக நடத்தினால் நாங்கள் அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.