சென்னை:
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவ.3 முதல் 6-ம் தேதிவரை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சா.பாபு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நவ. 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், தகவல் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.