சென்னை:
தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன், தங்கலான் உள்பட சில படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், பார்வையாளர்கள் மொழியைப் பற்றி கவலைப்படுவதில்லை; அவர்கள் உண்மையான கதையை மட்டுமே விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “இந்த மாற்றம் அழகானது. ஏனென்றால் அது எங்களை மேலும் கடினமாக உழைக்கவும், சினிமாவுக்கு உண்மையாக இருக்கவும் தூண்டுகிறது.
இந்தி திரைத்துறை, தென்னிந்திய சினிமா போல் இல்லாமல் பெரும்பாலும் ஒரே மாதிரி கதைகளையே படமாக்குவதாக முன்பு நினைத்திருந்தேன். இப்போது அந்த வேறுபாடு இல்லை.
இன்று இந்தி சினிமாவில் கதை சொல்லும் முறை, அதிக உண்மையுடனும் சோதனை முயற்சியாகவும் இருக்கிறது.
அதே நேரம் தென்னிந்திய திரைப்படங்களும் ஓடிடி- வருகைக்கு பிறகு விரிவடைந்துள்ளதால் இரண்டு துறையினரும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்கிறார்கள். இந்த மாற்றத்துக்கு இப்போதைய பார்வையாளர்கள்தான் காரணம்.
அவர்கள் புத்திசாலிகளாகவும் விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.