புதுடெல்லி:
“நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
‘மனதின் குரல்’ (மன் கி பாத்) 130-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றியதாவது: எனதருமை நாட்டு மக்களே… நாளை 26-ம் தேதி இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
இந்த தினத்தில்தான் அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெருந்தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.
இன்றைய தினம் (ஜன.25) கூட சிறப்பு வாய்ந்த நாள்தான். இன்றுதான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த சிறப்பான தினத்தில் 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். வழக்கமாக 18 வயதை அடையும் போது வாழ்க்கையில் அதுவும் ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த வயது ஒரு மைல்கல்.
தேர்தல் ஜனநாயக செயல்பாடுகளில் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருப்பவர்கள் வாக்காளர்கள்.
நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.
அந்தப் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பித்தல் மட்டுமன்றி மற்ற பாடங்களும் தமிழ் மொழிலேயே கற்பிக்கப்படுகின்றன. தெலுங்கு, பஞ்சாபி போன்ற மற்ற இந்திய மொழிகளுக்கும் மலேசியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்தியா – மலேசியா இடையில் வரலாற்று ரீதியாக, கலாச்சார உறவுகளை பேணுவதில், ‘மலேசிய இந்திய பாரம்பரிய சங்கம்’ முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மாதம், மலேசியாவில் ‘லால் பாட் சேலை’ அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சேலைக்கு நமது வங்க கலாச்சாரத்துடன் சிறப்புத் தொடர்பு உண்டு. இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட் அப் இண்டியா திட்டத்தை தொடங்கி இன்று உலகளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளோம். அதேநேரத்தில் புதுமை, தரம் ஆகியவற்றில் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நமது தயாரிப்புகள் உலகின் கவனத்தை ஈர்க்கும். தற்போது நாட்டின் பல நகரங்களில் இளைஞர்களிடம் ‘பஜன் கிளப்’ என்று அழைக்கப்படும் இசை நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருகின்றன.
பக்திப் பாடல்களின் புனிதம் கெடாமல் அவர்கள் பாடுவதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடுத்த மாதம் இந்திய செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாடு நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த மாநாடு குறித்து பேசுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.