சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி) நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) உடன் இணைந்து, தமிழ்நாடு விற்பனையாளர் நல சங்கம், விடுதலை சிறுத்தைகள் பணியாளர் சங்கத்தினர், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துக் கொண்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பாக, 23 ஆண்டுகளாக தற்காலிகமாக பணி செய்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்களை பயன்படுத்தாமல், மாற்று வழியில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
முன்னதாக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது.
இந்தக் கோரிக்கைகள் எல்லாம் உழைக்கும் மக்களின் உரிமை. இது அரசுக்கு எதிரான போராட்டம் கிடையாது.
தமிழக அரசு போராடும் இந்த அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்’’ என்றார்.
முதல்வர் தலையிட வலியுறுத்தல்: விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் அலட்சியப்படுத்தப்பட்டனர்.
அவர்களது பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
புதிய அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், தற்போது பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
போராடும் டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்வர் நேரடியாக தலையிட்டு, சுமூக தீர்வு காண முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.