சென்னை:
பூம்புகார் நிறுவனம் மூலம் பத்தமடை பாய் உள்பட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடுபெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார்.
தமிழக அரசின் பொதுத்துறைநிறுவனமான பூம்புகார் சார்பில்கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் பூம்புகார் விருது வழங்கும் விழாசென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில்சிறந்த கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருதுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
மேலும், தமிழக கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பூம்புகார்நிறுவனத்தின் புதிய மின்வணிக இணையதளத்தையும் (www.poompuhar.com) தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியது: பூம்புகார் நிறுவனம், கடந்த 52 ஆண்டுகளாக கைவினைக் கலைஞர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் நேரடி விற்பனை, இணையதள விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் ரூ. 232 கோடியே 22 லட்சம்மதிப்பிலான கலை பொருட்களை விற்பனை செய்து சாதனைபடைத்துள்ளது.
தமிழகத்தின் கைவினைப் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்ல பூம்புகார் நிறுவனத்தின் மூலம் பூவிசார் குறியீடுகள் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி, அரும்பாவூர் – மரச்சிற்பங்கள், தஞ்சாவூர், கருப்பூர் கலங்காரி – ஓவியங்கள், மாமல்லபுரம், மயிலாடி – கற்சிற்பங்கள், சுவாமிமலை பஞ்சலோக சிற்பங்கள், பத்தமடை பாய் என 23 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. 10 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் அனைத்து வகை தொழில்முனைவோரும் பயன்பெறும் வகையில், கலைஞர் கைவினைத் திட்டத்தை அரசுசெயல்படுத்தி வருகிறது.
பூம்புகார் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டத்தின்கீழ் 504 கைவினைக் கலைஞர்கள் ரூ. 2 கோடியே 52 லட்சம் மானியத்துடன் ரூ.15 கோடியே 12 லட்சம் கடன் பெற்று பயன் அடைந்துள்ளனர்.
இத்திட்டத்தை கைவினைஞர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு பேசினார்.
விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த்துறை செயலர் அமுதவல்லி, மத்திய அரசின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி வர்த்தக மண்டல மேலாளர் ஸ்ரீதேவி, கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தின் தென்மண்டல அலுவலர் லஷ்மன் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.