உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் எடுத்து செல்ல ஜூன் 4-ந்தேதி வரை கட்டுப்பாடு தொடரும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்திருந்தாலும், வாகன சோதனை என்பது தொடரும். உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையால் சுமார் 28 கோடி பணம் , பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரொக்க பணம் மட்டும் ரூபாய் 88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4.53 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி சிக்கி உள்ளது. இது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழக முழுவதும் இதுவரை 2 கோடி 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
