கொல்கத்தா:
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக, 142 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, காலை 11 மணி நிலவரப்படி ஹூக்ளியில் 43.12%, ஹவுராவில் 39.45%, வடக்கு கொல்கத்தாவில் 38.39%, தெற்கு கொல்கத்தாவில் 36.78%, நாடியாவில் 40.34% மற்றும் தெற்கு 24 பர்கானாவில் 37.92% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி, பூர்பா பர்தமான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20.86% வாக்குப்பதிவாகியிருந்தது.
“சில குறிப்பிட்ட பகுதிகளில் நிகழ்ந்த சிறிய அளவிலான சம்பவங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நாங்கள் அறிக்கைகளைக் கோரியுள்ளோம்,” என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவின் தொடக்க நேரங்களில், மேற்கு வங்கத்தின் சாப்ரா, சாந்திப்பூர், நிம்தலா மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை மற்றும் நாசவேலைச் சம்பவங்கள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 142 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.
இவற்றில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி முதற் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகள் கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு, ஹவுரா, நாடியா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மற்றும் புர்தா பர்தாமன் ஆகிய 8 மாவட்டங்களில் அமைந்துள்ளன.