நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 102 இடங்களில் கடந்த 19-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மோடி அலை வீசியதாக பா.ஜனதா கூறுகிறது. ஆனால், மோடியின் தோல்வியை முதற்கட்ட வாக்குப்பதிவு வெளிப்படுத்தியுள்ளது.
200 தொகுதிகளைக் கூட பா.ஜனதா கூட்டணி தாண்டாது. அதன் விரக்தியால் பிரதமர் மோடி உண்மையான பிரச்சனையை திசைத்திருப்பும் வகையில் பேசி வருகிறார் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-
இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்… அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்…
தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?.
அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதை வலுப்படுத்தும் விதமாக டாக்டர் மன்மோகன் சிங் பேசிய 22 நிமிட வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு “காங்கிரஸ் சொந்தப் பிரதமரை நம்பவில்லையா?” எனக் குறிப்பிட்டிருந்தது. 2006-ல் மன்மோகன் சிங் பேசியது தொடர்பாக சர்ச்சை வெளியான நிலையில், அப்போதைய பிரதமர் அலுவலகம் அதற்கு பதில் அளித்திருந்தது.
தற்போது பிரதமர் மோடி பேசியதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்துக்குப் பிறகு, அச்சம் காரணமாக நரேந்திர மோடியின் பொய்களின் அளவு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பவுதற்கு விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியின் புரட்சிக்கரமான தேர்தல் அறிக்கை மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்தியா வேலை வாய்ப்பு, குடும்பம், எதிர்காலம் ஆகியற்றிற்காக வாக்களிக்கும். இந்தயா தவறான பாதையில் செல்லாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தி வருகிறார்கள்.
இதனால் பிரதமர் மோடியின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.