சென்னை:
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அமமுக சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கட்சி சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் வாக்களித்தார்.
மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளிலும் வெளிப்படை யாகவே தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்தார்.
இதனால் கட்சியிலிருந்து காமராஜ் நீக்கப்பட்டார். இந்நிலையில் எம்எல்ஏ காமராஜ் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமமுக பொருளாளர் கரிகாலன், சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘அமமுக எம்எல்ஏ காமராஜ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி தலைமையின் உத்தரவுக்கு மாறாக தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
அதனால் அவர் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளோம்.
எம்எல்ஏவை கட்சியை விட்டு நீக்கியது ஒழுங்கு நடவடிக்கைதான். கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் அவர் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அந்த அடிப்படை யில்தான் நாங்கள் புகார் அளித்தோம்’’என்றார்.