வாஷிங்டன் டி.சி.:
ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஈரான் உடனான மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேலும் முடக்கும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
ஈரானை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துவதன் மூலம், அந்த நாட்டை பணிய வைக்கும் நோக்கில் அதனை பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம் தொடர்புடைய நிறுவனங்களை குறிவைத்து அந்த நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானிய பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி என்ற நிறுவனம் உதவியுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக இந்தியாவைச் சேர்ந்த இந்த்ரிஸ்மியா அஷாராஃப்மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோர் உள்ளனர்.
இதேபோல், சதாசிவ ஓவர்சீஸ் லிமிடெட், பிப்ரவரி 2024 முதல் ஜூன் 2025 வரை அமெரிக்காவால் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட ஈரானிய நிறுவனமான போன்ஜூர் கம்மோடிட்டி எப்.இசட்.இ உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து சுமார் 69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
பிபி சாஃப்டெக் பிரைவேட் லிமிடெட், ஜனவரி 2024 முதல் ஜூன் 2025 வரை சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
பிரக்ருதீஸ் இன்ஃப்ரா இம்பெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலிய பொருட்களை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்தள்ளது.
ஈரானிடமிருந்து பெட்ரோலியம் அல்லது பெட்ரோலியப் பொருட்களை வாங்குதல், சேமித்தல், விற்பனை செய்தல், போக்குவரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைளில் தெரிந்தே ஈடுபட்டதால், இந்நிறுவனங்கள் E.O. 13846-ன் பிரிவு 3(a)(ii)-ன் கீழ் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.