சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
இப்போட்டியில் கே.எல்.ராகுல் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை 504 ரன்கள் அடித்துள்ளார்.
8 முறை ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.