சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும்போது, “எங்க அப்பா 1967 லில் இருந்து திமுக உறுப்பினர் ( முத்துவேல்). இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு..உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா எனக் சிவக்குமார் கேட்டுள்ளார்.
அப்போது மு.க.ஸ்டாலின் அப்பாக்கு போன் பண்ணுங்க நானே பேசி வரச் சொல்லுறேன் என கூறியுள்ளார். உடனே ஒன்றிய செயலாளர் உடனே தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அவரிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- “வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்.
உங்கள் மகன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவருடன் நான் பேசினேன். என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினீர்களா..? நாளைக்கு சென்னை வாரீங்களா.. அறிவாலயத்துக்கு வாங்க போட்டோ எடுத்துக்கொள்ளலாம்” என்று பேசினார்.
அப்போது ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கண் கலங்கினார். இதனை பார்த்த முதல்-அமைச்சர் ஏன் அழுகிறீர்கள் என கேட்டார். பின்னர் அப்பாவுடன் மு.க.ஸ்டாலின் பேசுவதைக் கண்டு ‘இது போதும்’ எனக் ஒன்றியச் செயலாளர் கண் கலங்கியபடி கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.