சென்னை:
பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை சேர்ந்த இவர் கடந்த 2024-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த பிப்பின் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சுபாஷிணி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சென்னை வந்த அவர் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல சுபாஷிணி கணவர் பிப்பின் சந்திரனுடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த சுபாஷிணி திடீரென தனது படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை வீடியோ கால் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிப்பின் சந்திரன் உடனடியாக இதுபற்றி போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று சுபாஷிணியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுபாஷிணி குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சுபாஷிணியின் செல்போனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுபாஷிணியின் கணவர் பிப்பின் சந்திரனிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.