கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். 19-வது வார்டு கவுன்சிலராக இருந்த அவர் உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி , மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனிடம் கடந்த மாதம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, ஜூலை 8-ம் தேதி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் சிறப்பு மாமன்றக் கூட்டம் நடைபெற்றது.
துணைமேயர் ரா.வெற்றிச்செல்வன் தலைமையில், ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா குறித்து விவாதிக்கப்பட்டது.
கவுன்சிலர்கள் அனைவரும் கல்பனாவின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் கோவை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக.,06) நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த பதவியை பிடிக்க திமுக கவுன்சிலர்கள் முயற்சி செய்து வந்த நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல்முறையாக கவுன்சிலர் ஆனவர் என்பது, கோவை எம்.பி., ராஜ்குமாரின் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.