சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடக்கூடாத பழங்கள்!!

பழங்களில் இயற்கையான இனிப்பும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாக விளங்குகின்றன.

இருப்பினும் எல்லா பழங்களையும் விரும்பிய நேரத்தில் சாப்பிடக்கூடாது. சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. அந்த பழங்கள் பற்றியும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொண்டால் சிலருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அதிக அமிலத்தன்மை வயிற்றின் குடல் பகுதியை எரிச்சலடைய செய்து செரிமான பிரச்சனைகள் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அசிடிட்டி, இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் கொண்ட நபர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

அன்னாசி:

அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்ற நொதி உள்ளது. இந்த நொதி செரிமானத்திற்கு உதவும். அதே வேளையில் அன்னாசி பழத்தை அதிகமாகவோ, வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பையில் கோளாறுகளை ஏற்படுத்தும்.

அதிலும் தூங்குவதற்கு முன்பு அன்னாசி பழம் சாப்பிடும்போது புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரணம், வீக்கம், வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

மாம்பழம்:

மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரையும், நார்ச்சத்தும் அதிகம். உறங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு விரைவாக அதிகரிக்கக்கூடும். தூக்க முறையும் சீர்குலையும்.

மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் நிலையில், வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் அதனை இரவில் அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தர்பூசணி:

நீர்ச்சத்து நிறைந்த இந்த பழம் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஊட்டக்கூடியது. ஆனால் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.

இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் தூக்கம் தடைபடும். குறிப்பாக இரவில் அதிக அளவு தர்பூசணி சாப்பிட்டால் அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் போராட வேண்டியிருக்கும்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், இயற்கை சர்க்கரைகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும், உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும்.

தூங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை தரும் என்றாலும் அதிகமாக உட்கொள்வது அசவுகரியத்தை உண்டாக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *