திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா!!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 19-ந் தேதி உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதையடுத்து சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வாத்தியங்கள் இசையுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலையில் அம்மன் வளைகாப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வளைகாப்பு உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *