சென்னை:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருப்பவர் இ.பெரியசாமி. இவர் தி.மு.க.வில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ளது.
இன்று காலை இவரது வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சோதனைக்கு வந்தனர். அப்போது வீட்டில் அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி இருந்தனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் இ.பெரியசாமியிடம் தெரிவித்து விட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் இ.பெரியசாமியின் மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சீலப்பாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் அமைச்சர் இ.பெரியசாமியின் மகள் இந்திரா தனது கணவர் துவாரகநாதன் மற்றும் குழந்தைகளுடன் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கும் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
- வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாக தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது.
- தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
- தி.மு.க. அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது.
- மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது.
- எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க.வினரை அச்சுறுத்தி விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.