சென்னை,
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த 5-ம் தேதி இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, (திங்கட்கிழமை) கடந்த 6-ம் தேதி டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதேபோன்று இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், ராமதாசை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு திருமாவளவன் நலம் விசாரித்தார்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.” என தெரிவித்துள்ளார்.