வரலாறு படைக்கப்பட்டுள்ளது… உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் பாராட்டு!
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவிற்கு என்ன ஒரு சிறப்பான தருணம்!. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் தங்களின் தைரியம் மற்றும் சக்தியால் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர்.
நீங்கள் பயமின்றி, உறுதியுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.