சென்னை:
மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட்டு மின் கட்டணத்தை வசூலிக்கிறது.
மின்வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக, அந்தந்த மாநிலங்களின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றி அமைத்து வருகிறது.
தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேபோல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோரும் அதிக அளவில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்காது. ஆனால், 300 யூனிட் அல்லது அதற்கு மேல் பயன்படுத்துவோர் கணிசமாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக, 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.95 கட்டணம், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65 கட்டணம், 501 முதல் 600 யூனிட் வரை ரூ.8.80 கட்டணம், 601 முதல் 800 யூனிட் வரை ரூ.9.95 கட்டணம், 801 முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05 கட்டணம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மின்நுகர்வோர் புகார்: சில பகுதிகளில் 60 நாட்களில் எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு தாமதமாகி, 5 நாட்களுக்கு பிறகு எடுக்கப்படுவதால், யூனிட் வரம்பு உயர்ந்து, மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துவிடுகிறது.
அந்த வகையில், பல வீடுகளில் செப்டம்பர், அக்டோபர் மாதத்துக்கான மின்கட்டணம் வழக்கத்துக்கு மாறாக பல மடங்கு அதிகரித்துள்ளதாக மின்நுகர்வோர் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கட்டண உயர்வு குறித்து தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பல இடங்களில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடைபெறவில்லை. இதில் பல பிரச்சினைகள் இருப்பதாக மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
வீடுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் வந்தால், சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் நுகர்வோர் முறையிடலாம். தவறு இருந்தால், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துவார்கள். மின்வாரிய ஊழியர்களிடம் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.