சென்னை:
தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது. மனிதாபிமானமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கழிப்பறையில் கூட காசு பார்த்து கொள்ளையடிக்கும் திமுக தலைவர்களை ராஜமரியாதையுடன் நடத்தும் உங்கள் அரசுக்கு, நமது நாட்டைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் என்ன சிக்கல்? எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மைப் பணியாளர்கள் கேட்டார்களா?
எதற்காக ‘சோறு போடுகிறோம்’ என்ற போர்வையில் அவர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கிறீர்கள்? விளிம்பு நிலை மக்கள் மீது திமுகவுக்கு உள்ள வெறுப்பு இந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை.
திமுக அரசின் அகம்பாவப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் வரும் தேர்தலில் வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளத் தயாராகுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.