மும்பை:
ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது.
இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐசிசி அறிவித்தது.
இதன்படி டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
டி 20 உலகக் கோப்பை தொடரில் 2-வது முறையாக 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளும் உள்ளன.
‘சி’ பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், மேற்கு இந்தியத் தீவுகள் இடம் பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். லீக் சுற்று பிப்ரவரி 7 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்று 21-ம் தேதி முதல் மார்ச் 1 வரை நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 4, 5-ம் தேதிகளில் நடத்தப்படுகின்றன. சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 8-ம் தேதி அகமதாபாத் அல்லது கொழும்பு நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் இந்தியாவில் உள்ள டெல்லி அருண் ஜேட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், மும்பையில் உள்ள வான்கடே மைதானம் ஆகியவற்றில் நடத்தப்பட உள்ளது.
இதேபோன்று இலங்கையில் கண்டி பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம், சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறுகின்றன.
பாகிஸ்தான் அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அந்த ஆட்டங்களும் அங்குதான் நடத்தப்படும். மேலும் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறினால் அந்த ஆட்டங்களும் கொழும்பு நகரில் நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தொடக்க நாளான பிப்ரவரி 7-ல் அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 12-ம் தேதி நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
15-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டத்தில் 18-ம் தேதி நெதர்லாந்தை சந்திக்கிறது.
சேப்பாக்கத்தில் இந்தியா போட்டி இல்லை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 8ம் தேதி நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், 10ம் தேதி நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 13ம் தேதி அமெரிக்கா, நெதர்லாந்து அணிகளும், 15ம் தேதி அமெரிக்கா, நமீபியா அணிகளும், 17ம் தேதி நியூஸிலாந்து, கனடா அணிகளும், 19ம் தேதி ஆப்கானிஸ்தான், கனடா அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
அதன் பின்னர் சூப்பர்-8 சுற்றில் 26ம் தேதி ஒரு ஆட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளுக்குப் பின்னர் சூப்பர்-8 சுற்றில் பங்கேற்கும் அணி விவரங்கள் தெரியவரும். துரதிருஷ்டவசமாக சேப்பாக்கம் மைதானத்தில், இந்த முறை இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் இடம்பெறவில்லை.
ரோஹித் சர்மாவுக்கு கவுரவம்: ஆடவருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான பிராண்ட் தூதராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மாவை நியமித்துள்ளார் ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா. கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது.
இந்தத் தொடருடன் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றிருந்தார்.