சென்னை;
நாட்டில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் சென்னையில் சுமார் 1.42 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரியளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டு கட்டான பணத்தை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ. 1.42 கோடி பணம் இருந்தது.
மேலும் அங்கே இருந்த 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை வைத்திருந்ததற்காக அந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணத்தை வைத்திருந்த யாசர் அரபாத் என்பதும், மற்றொருவர் அதனை வாங்க வந்த ஜெயின் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அங்கே இருந்த மற்றொரு நபரையும் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட முதல் நாளே கோடிக் கணக்கில் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.