உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது.
இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வந்தது.
இன்று காலை 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.11 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ள அமராவதி அணை தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.