கைபர் பக்துன்கவா ;
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தி, இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் சாலை மற்றும் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் என சொல்லப்பட்டது.
சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கைபர் பக்துன்கவா பகுதியில் சீனப் பொறியாளர்கள் பாகிஸ்தான் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தசு என்ற இடத்தில் இப்போது அணை கட்டும் திட்டம் நடந்து வருகிறது.
சீனாவின் இந்த திட்டங்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் பலமுறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன.கடந்த 2021-ஆம் ஆண்டு தசுவில் நடந்த தாக்குதலில் 9 சீனர்கள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இப்போது மீண்டும் தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசிய மாகாண காவல் துறை தலைவர் முகமது அலி காண்டாபூர், “பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தசு முகாமுக்கு, சீன பொறியாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலை படையைச் சேர்ந்தவர் மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்” என தெரிவித்துள்ளார்.