சென்னை:
“விஜய் போன்றவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல் இருக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர்வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.
இதற்கான பணிகளை தொடங்கிவைத்த அதிமுக முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏ-வுமான செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின், அவரது கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணி என்கிறார்.
ஆனால், காங்கிரஸ் எங்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறது. கருணாநிதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பேசியவர் வைகோ. ஆனால், இன்று திமுக கூட்டணியில் சேர்ந்து கூடுதல் சீட் கேட்போம் என்கிறார்.
யாருக்காவது டார்ச் லைட் ஞாபகம் இருக்கிறதா? ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று டார்ச் லைட்டை வீசி தொலைக்காட்சி பெட்டியை உடைத்த கமல் இன்று அக்கூட்டணியில் சேர்ந்து கூடுதல் சீட் கேட்கிறார்.
உலக நாயகன் இன்று நகைச்சுவை நாயகனாக மாறிவிட்டார். நடிகர் என்ற முகத்தை வைத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள் நடிகர்கள்.
நடிகர் முகத்தைப் பார்ப்பதற்குத்தான் கூட்டம் கூடுவார்கள்; ஓட்டுப்போட மாட்டார்கள். எம்ஜிஆர் மினிமம் கேரன்டி நடிகர். ஆனால், விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள் பலர் தெருவில் நிற்கிறார்கள். அரசியலில் நிற்க வேண்டுமென்றால் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்” என்றார்.
மற்றவர்கள், கட்சியைத் தொடங்கிவிட்டுத்தான் வீடு தேடி வருவார்கள். ஆனால், நாங்கள் வீட்டுக்கு ஒரு ஓட்டு வைத்துக் கொண்டுதான் கட்சியே தொடங்கினோம் என்று தவெக-வினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “வாயால் யாரு வேண்டுமென்றாலும் வடை சுடலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு இருக்கிறதை இவர் நுழைந்து பார்த்தாரா… கணக்கெடுத்தாரா? எல்லாம் சும்மா பில்டப்தான். கதாநாயகனாக இருந்தவர் பில்டப்தான் கொடுப்பார்.
41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறுகிறார். இதையெல்லாம் பார்க்கையில் என்னங்கடா அரசியல் வாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று நினைக்கத் தோன்றுகிறது.
இவர்களைப் போன்றவர்களின் அழிச்சாட்டியத்தால் அரசியலை விட்டே போயிடலாம் போல் இருக்கிறது. இந்தக் கட்சியெல்லாம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா… எனக்கு என்னமோ சந்தேகம்தான்” என்றார் ராஜு.