மதுரை
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி கம்பத்தடி மண்டப வளாகத்தில் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகைக்கு 9 நாட்கள் தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.
வருகிற 23-ந்தேதி ராஜ ராஜேஸ்வரி அலங்காரம், 24-ந் தேதி நக்கீரருக்கு காட்சி கொடுத்தல் அலங்காரம், 25-ந் தேதி ஊஞ்சல் அலங்காரம், 26-ந்தேதி பட்டாபிஷேகம் அலங்காரம், 27-ந் தேதி திருக்கல்யாணம் அலங்காரம், 28-ந் தேதி தபசு காட்சி அலங்காரம், 29-ந் தேதி மகிஷாசுவர்த்தினி, 30-ந் தேதி சிவ பூஜை, 1-ந்தேதி சரஸ்வதி பூஜை நடக்கிறது. திருவிழா காலங்களில் சுவாமி புறப்படக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கொலு பொம்மையாக வைக்கப்படும்.
வருகின்ற 2-ந் தேதி வில் அம்பு போடுதல் நடக்கிறது. இதனையொட்டி அன்று மாலையில் கோவிலில் இருந்து பசுமலையில் அம்பு போடும் மண்டபத்திற்கு தங்க குதிரையில் அமர்ந்து வெள்ளியிலான வில் அம்பு ஏந்தியபடி மேள தாளங்கள் முழங்க முருகப்பெருமான் புறப்படும் நிகழ்வு நடக்கிறது.
இதனை தொடர்ந்து பசுமலையில் உள்ள மண்டபத்தினை முருகப்பெருமான் வலம் வந்து நான்கு திசையிலும் எட்டு திக்குமாக வில் அம்பு எய்தல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன் அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன் மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.