நவிமும்பை:
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி ஷபாலி வர்மா (87), தீப்தி சர்மா (58), ஸ்மிருதி மந்தனா (45), ரிச்சா கோஷ் (34) ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.
299 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் விளாசிய போதிலும் மற்ற வீராங்கனைகளிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்படாததால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியானது 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய ஆடவர் அணி முதன் முறையாக உலகக் கோப்பை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியதை நினைவூட்டும் வகையில் அமைந்தது.
எனினும் மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி பட்டம் வென்றுள்ளது 50 வருட போராட்டங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 1973-ம் ஆண்டில் இருந்து இதுவரை 13 முறை மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே அனைத்து தொடர்களிலும் விளையாடியுள்ளன. இவற்றில், ஆஸ்திரேலியா 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூஸிலாந்து ஒருமுறையும் கோப்பை வென்றுள்ளன.
1976-ல் விளையாடத் தொடங்கிய மகளிர் அணியினர், 50 ஆண்டுகளை கடந்து இப்போதுதான் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளனர்.
2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் இந்திய அணியால் வெற்றியை கோப்பையை முத்தமிட முடியாமல் போனது.
மேலை நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய மகளிர் கிரிக்கெட்டில் தற்போது முதல் ஆசிய அணியாக இந்தியா கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்ற 4-வது நாடாகப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: இது ஆரம்பம்தான்.
இந்தத் தடையை உடைக்க நாங்கள் விரும்பினோம். இதை ஒரு பழக்கமாக்குவதே எங்கள் அடுத்த திட்டம். நாங்கள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. நாங்கள் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். இது முடிவு அல்ல, வெறும் ஆரம்பம்.
லாரா வோல்வார்ட்டும், சுனேவும் சிறப்பாக பேட் செய்து கொண்டிருந்தனர். அப்போது நான் ஷபாலி வர்மாவை பார்த்த போது அவருக்கு ஒரு ஓவரையாவது கொடுக்க வேண்டும் என என்னுடைய உள்ளுணர்வு கூறியது. அதுதான் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இறுதியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் சற்று பதற்றம் அடைந்தனர். அதை நாங்கள் அறுவடை செய்தோம். சரியான நேரத்தில், தீப்தி சர்மா விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.