தஞ்சாவூர்:
“தவெக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஹிட்லர் ஆட்சிபோல் சென்று கொண்டிருக்கிறது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மாற்றுத் திட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்கமான அதிமுக அழிந்து போகும் என செங்கோட்டையன் கூறியிருப்பது, அந்த இயக்கத்தின் மீது வன்மம் கொண்ட மனிதராக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசும்போது, “மூன்று ஃபைல்களை நான் ஒபன் செய்ய வேண்டியிருக்கும்,” என மிரட்டும் தொணியில் பேசுவது கண்டிக்கதக்கது.
யார் குற்றம் செய்திருந்தாலும் தவறுதான். எனவே அந்த கோப்புகளை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் திராவிட கட்சிகள் பயந்து விடாது.
முதல்வர் ‘தூய சக்தி’ என்று சினிமா டைலாக் பேசி அரசியலுக்கு வந்தார். அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா. சிறந்த அரசியல் வில்லன் நடிகர் விஜய். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கலாம்.
6 சிலிண்டர்கள் தருவதாக கூறி மூன்று சிலிண்டர் தருகிறார். அதில் எதற்கு வருமான வரம்பு வைக்க வேண்டும். தமிழகத்தில் படித்து விட்டு இளைஞர்கள் வேலை இல்லாமல் பலர் உள்ளனர்.
ஆனால் நடத்துநர், ஓட்டுநர் பதவிக்கு வெளி மாநில சேர்ந்தவர்களை நியமிக்கிறார்கள்.
தங்க மோதிரம் திட்டத்துக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த நகைக் கடைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பெயர் தான் தமிழக வெற்றிக் கழகம், செய்வது எல்லாம் வேறு வேலையாக தான் இருக்கிறது.
திராவிட ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு இருக்கலாம், ஆனால் வளரந்த மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அதள பாதாளத்தில் தமிழகம் செல்கிறது.
தவெக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஹிட்லர் ஆட்சி போல் சென்று கொண்டிருக்கிறது. வரும் உள்ளாட்சி தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியோடு சந்திப்போம்” என்று அவர் கூறினார்.