ஊட்டி:
ஊட்டியில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் 26 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உடனிருந்தார்.
தொடர்ந்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
இந்த அணி வகுப்பில் காவல்துறை, ஊர் காவல் படை, தீயணைப்புத் துறை ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பல்வேறு துறைகள் மூலம் 163 அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பல்வேறு துறைகள் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 68 ஆயிரத்து 35 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் தோடர் பழங்குடியின இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், கூடுதல் ஆட்சியர் அபிலாஷ் கவுர், மாவட்ட வருவாய் அலுவலர் மா.நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.